- சீனர்கள் வணங்கும் முனீஸ்வரன்
- Vishalam Raman
என் ஆன்மீகக் கட்டுரை, ஞானபூமியில அக்டோபர் மாதம் வந்தது
சமீபத்தில் எனக்கு சிங்கப்பூர் போகும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் அங்குச் சில மாதங்கள் தங்கியதால் பல கோயில்கள் பார்க்கும் பாக்கியமும் கிடைத்தது. உலகத்தில் பலநாடுகள், எதாவது ஒரு பிரச்சனை, பகை, தீவிரவாதம் என்று அமைதி இழந்து தவிக்க, சிங்கப்பூர் மட்டும் அமைதிப் பூங்காவாகி அதில் பல மதங்களின் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, அதை எல்லாம் சேர்த்து அழகான கதம்ப மாலையாக்கி மகிழ் வைத்தருகிறது அந்த அரசு. நான்கு இன் மக்கள் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழும் நாட்டைக் கண்டு என் மனம் மிகவும் குதூகலமடைந்தது, அதுவும் எல்லாக் கோயில்களிலும் இந்திய மக்களுடன், சீனர்கள், மலேசியர்கள் மற்றும் பல மதத்தினர் வந்து வணங்கி, விபூதி பிரசாதம் வாங்கி, அதை நெற்றியிலும் தரித்துச் செல்வதை நான் கண்டேன்.
இதில் நான் பார்த்த, மறக்க முடியாத கோயில் ஒன்று "ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரன் ஆலயம்", ஹோக் ஹுவெட் கெங் {Hock huat keng} என்ற சீனக்கோயில் அது, ஆனால் அங்குப் போனதும் என் வியப்பு பனமடங்காகியது, ஏன் என்றால் நான் சென்ற சீனக்கோயில் வளாகத்திலேயே ஒரு பக்கம் அமர்ந்து அருள் புரிகிறார் இந்த ஸ்ரீவீரமுத்து முனீஸ்வரன். ஆஹா! என்ன அருமையானக் காட்சி! சீனர்கள் இங்கே வந்து சீன்க்க்டவுளைத் தொழுது பின் வீரமுனீஸ்வரனையும் தொழுகின்றனர். பிரசாதமாகப் பல விஸ்கி போன்ற சாராயப் பாட்டில்கள் வைக்கப்படிருந்தன. அத்துடன் சிலர் படையல் படைப்பதையும் கண்டேன். பானகம், வெல்லம் சில பழங்கள் வைக்கப்படிருந்தன. இதேபோல் இந்துக்களும் சீனக் கடவுளையும் வணங்கி வருகின்றனர்.
என் நண்பர் திரு குமார் என்பவர்தான் என்னை இங்கு அழைத்துப்போய் பல தகவல்களைச் சொன்னார். நான் அங்கு நுழைந்ததும் சீனக்கடவுள் முன் இருக்கும் சிறு மண்டபம் போன்ற அறையில் ஒரு புலியின் சிலையைக் கண்டேன். அந்தப்புலி பார்க்க பயங்கரமாகத்தான் இருந்தது. அதற்கும் பூஜை நட்ந்து பிரசாதங்கள் வைக்கப்படிருந்தன. எனக்கு சபரிமலை ஐயப்பன் புலி மேல் பவனி வந்தது ஞாபகம் வந்தது. நான் புலியின் அருகில் போக முற்பட்டேன். ஒருவர், "அருகே போகாதீர்கள், தூர நின்று பாருங்கள் என்றார். மனப்பிரமைப் பிடித்தவர்கள், பேய் பிடித்தவர்கள் போன்ற்வர்களுக்கு அங்கு எதோ பரிகாரம் நடக்குமாம். போட்டோவும் எடுக்காதீர்கள் என்றார், ஆனால் நான் அதைப்போட்டோ பிடித்துவிட்டேன், ஆனால் அந்தப்படம் போட்டோவில் விழவில்லை.
அந்தப் புலியைப் பற்றி அங்கு இருந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னத்தகவல், நூறு ஆண்டுகளுக்கு முன் அந்த இடம் ஒரு காடாக இருந்தது. புதர்களும் முட்செடிகளும் மண்டிக்கிடந்தன. அந்த இடத்திற்குச் சில இந்தியத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர். அவர்களுக்கு அரசு குவார்ட்டர்ஸும் கொடுத்த்து. இந்தியர்கள் எங்குச் சென்றாலும் அவர்கள் குலதெய்வத்திற்கு ஒரு கோயில் அமைத்து விடுவார்கள். அது மாரியம்மன், ஐயனார், முருகன் அல்லது முனீஸ்வரனாக இருக்கும். இந்தத் தொழிலாளிகள் ஒரு ஆலமரத்தின் கீழ் தங்கள் தெய்வமான முனீஸ்வரனை வைத்து பூஜை செய்து வந்தார்கள். அவர்கள் வைத்த் இடத்தின் சமீபத்தில் சீனக் கடவுளின் கோயிலும் இருந்தது. காட்டில் வாழும் புலிகள் தங்கள் பசியாற்றியப்பின் அடிக்கடி "ஹோக் ஹூவாட் கெங்" சீனக்கோயிலினுள் வந்து படுத்து ஓய்வெடுக்கும். ஆனால் இந்த புலிகள் ஒருவரையும் கொன்றதில்லை, காயப்படுத்தினதில்லை.
இந்தியமக்கள் இந்தபுலிகள் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்ததை ப்பார்த்து, அவைகளை முனீஸ்வரனாகவே பார்த்தனர். அதேபோல் சீனர்களும் அவைகளை தெய்வ அம்சமாகவே கண்டனர். இதனால் ஹோக் ஹுவாட் கெங் சீனக்கோயில் நடத்துபவர்கள் அங்கு ஒரு புலியின் சிலையையும் வைத்து பூசை செய்ய விரும்பி, அதன்படி ஒரு புலியின் சிலையையும் அமைத்தனர். அது பிரதிஷ்டைச்செய்த பின் அங்கு போன சிலருக்குப் புலியின் உறுமல் சிலையிலிருந்து கேட்டதாம். இதே போல் முனீஸ்வரனது நிழலையும் பலர் கண்டனராம்.
ஒரு சம்யம் தெருவை அகலப்படுத்தும் வேலை ஆரம்பித்து பழைய சீனக்கோயிலை "இயோசூச் காங்" சாலையிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சீனர்களும் நம்மைப்போல் இதுவிஷ்யமாக அருள்வாக்குக் கேட்டனர். "தெய்வமே உன்னை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. உன்னை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுமாம், அருள் புரிவாயா?"
அருள் ஏறிய சீனர் பதிலுறைத்தார், " என் அண்ணன் எங்கே? என் அண்ணன் முனீஸ்வரன் வந்தால்தான் நானும் வருவேன். என் அண்ணனிடம் சென்று கேள். போ போ"
இதேபோல் முனீஸ்வரனிடம் அருள் வாக்கு கேட்க அவருக்கும் பூரண சமமதம் என்ற பதில் வர எல்லோரும் மகிழ்ந்து புதிய ஈசன் தொழிற்பேட்டை இருக்கும் இடத்திற்கு மூனீஸ்வரனையும் சீனக்கடவுளையும் எடுத்து வந்தனர். அந்தக்கோயிலின் சில பகுதியை ஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரனுக்குக் கொடுக்க அன்றைய தினத்திலிருந்து அவரும் அங்கு அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அவர் முகம் பார்க்க நம்மையறியாமல் ஒரு பயபக்தி ஏற்படுகிறது. அவர் முகம் குங்குமப் பொட்டுடன் நம்மையெல்லாம் ஈர்க்கிறது. நம்பிக்கையுடன் தொழுதால் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. மக்கள் முனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றியப்பின் சீனக்கடவுளுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றிவைக்கின்றனர். பின் சிலர் புலியையும் வணங்குகின்றனர்.
புத்தாண்டில் பல சீன மக்கள் இந்தியர்களுடன் வந்து நீண்ட அலகுகள் குத்திக்கொண்டு காவடியும் எடுக்கின்றனர். பால் குடங்களுடனும் எடுக்கின்றனர். சீனக்கோயிலின் சிற்ப்க்கலை மிகவும் அழகாக எல்லோரையும் கவ்ர்கிறது. நம் கோயிலில் இருப்பது போல் யாளியின் உருவமும் யானை, குதிரைகளின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. சீனக்கோயிலில் உள்ளே அத்தனை ஒளி. நட்சத்திரங்களும் மின்னுகின்றன. பெரிய டிராகனின் சித்திரமும் பல இருக்கின்றன. சீனக்கடவுள் குறுந்தாடியுடன் சிறிய கண்களுடன் இருக்கிறார். சீனக் கடவுளின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை ஆனால் அங்கேயே இருக்கும் இந்தியர்கள் அழகாக அவர்கள் மொழியில் பேசி அவர்கள் கடவுள் பெயரையும் அழகாக் உச்சரிக்கின்றனர்.
முனீஸ்வரன் இருக்கும் இடத்தில் அருகில் ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது. அதன் நடுவில் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. நான் போன் போது ஒரு பெண்மணி பல தாள்களில் எதோ எழுதினாள். பின் அதை தன் சீனக்கடவுள் முன் வைத்து நம்ஸ்கரித்தாள், பின் முனீஸ்வரனிடம் வந்து வணங்கினாள், அதன் பின் அந்தத் தாள்களை ஒவ்வொன்றாக நெருப்பில் போட்டு எரித்தாள். இதைப்பற்றி அவளிடம் கேட்டேன். இது மூதாதையர்களுக்குச் செய்யும் அஞ்சலியாம், அவர்களது ஆசைகளைத் தாள்களில் எழுதி, அதை எரிக்க, அது அவர்களிடம் சென்று ஆன்மாவை நிறைவு படுத்துமாம். அந்தத்தாளில் காரின் படம், வீட்டின் படம் போடப்பட்டிருந்தது.
இந்துக்களும் சீனர்களும் ஒரே இடத்தில் இரு தெய்வங்களையும் தங்கள் தெய்வங்களாகவே எண்ணி உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து, நல்லிண்க்கத்தை வளர்ப்பதைப் பார்த்தால் நம் இந்திய நாடு இது போல் மாறாதா என்ற ஏக்கம் தோன்றுகிறது.
Designed and maintained by AKR Consultants

