- தண்டம்
மகா பெரியவா முன்னால் ஒரு நாள் காலையில் இளைஞன் ஒருவன் அழுதபடி நின்று கொண்டிருந்தான். பெரியவா கரிசனத்துடன் அவனை விசரிதாதும் அவனது அழுகை மேலும் அதிகமாயிற்று. சற்றுப் பொறுத்து அவன் தன்னைப் பற்றி மெதுவாகச் சொன்னான்; படிப்பு முடிந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் ஏச்சும் பேச்சும் தாங்க முடியவில்லை, அப்பா எப்பப் பாத்தாலும் என்னை "தண்டம் தண்டம்னு" குத்திக் காட்டிண்டு இருக்கார். மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. அதான் பெரியவா கிட்டச் சொல்லி ஆசிர்வாதம் வாங்கிண்டு போலாம்னு வந்தேன் என்று கரகரத்த குரலில் சொன்னார்.
கருணையோடு பார்த்த மகா பெரியவா ஒரு பக்கமாக உட்காரச் சொன்னார், அன்றைய அனுஷ்டானங்களை முடிக்க வேண்டும் அல்லவா?
தொடர்ந்து தனது செங்கோலாகத் திகழும் தண்டம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் செங்கோலுடன் எல்லோருக்கும் காட்சி அளித்த வண்ணம் அமர்ந்து இருந்தார்.
அப்பொழுது அரசுத் துறையில் உயர் பதவியில் இருந்த இன்ஜினியர் ஒருவர் பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார். அவரைப் பார்த்த மகான் புன்னகைத்தார், வந்திருந்த இன்ஜினியருக்கோ மனம் நிறைந்த உற்சாகம்.
தான் கையில் இருந்த துறவறத் திருக்கோலை அவரிடம் காட்டி, இதற்குப் பெயர் என்ன என்று கேட்டார்.
இன்ஜினியர் "தண்டம்" என்றார் மிகப் பணிவாக.
இதுக்கு உன்னால ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்று கேட்டார் மகான்.
"பெரியவா சொல்லறது எனக்குப் புரியலயே", என்றார் இன்ஜினியர்.
மகான் தன் அருகில் எட்ட இருந்த இளைஞனை அழைத்து இவனுக்கு ஒரு வேலை போட்டுக் குடுப்பியா? இவனை வீட்டில் எல்லாரும் "தண்டம் தண்டம்"னே கூப்பிடறாளாம்.
"பெரியவா உத்தரவு போட்டாப் போதாதா. அதுக்காகத்தானே காத்துண்டு இருக்கோம்", என்றார் இன்ஜினியர்.
"சரி, ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சிடுத்து, இனிமே இந்தத் தண்டத்துக்கு வேலை இல்லை"ன்னு சொல்லிட்டுத் தன் கையிலிருந்த செங்கோலைச் சுவற்றின் பக்கம் சாய்த்து வைத்து விட்டுச் சொன்ன வார்த்தைகள் இவை:
"தண்டம் தண்டம்னு" கரிச்சுக் கொட்டறாளே, அதுதான் எங்களுக்கும் ரக்க்ஷை, ப்ரும்மச்சரிகளுக்கும் ரக்க்ஷை. ராஜதண்டத்துக்கு அடங்கித்தான் லோகத்லையே நீதி நியாயங்கள் இருந்தது.
ஈஸ்வர சிருஷ்டியில் எதுவுமே உபயோகமானதுதான். தண்டமில்லை, என்றார்.
|
|
Post your comments to Facebook |
Designed and maintained by AKR Consultants

