- பென்ஷன் - Pension for Kainkaryam
Courtesy: Raman, kalakad
1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்கை என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளைப் பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான், "ஏம்பா! உங்களுக்கு எப்போப் பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்க்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும். உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.
பஞ்சாபகேசன் பதறிப் போனார், "சிவ சிவா!" அவருடைய உடல் ஒரு முறை நடுங்கியது. பேசக் கூட முடியலை. "பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணக் குடுத்து வெச்சிருக்கணும்டா! நேக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன், அதுனால, நீங்கள்ளாம் என்ன கெட்டுப் போய்ட்டேள்? எல்லாரும் life-ல நன்னாத்தானே இருக்கேள்? நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு. இப்பிடி ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா." ஆவேசமாகச் சொன்னார்.
"இல்லேப்பா, சர்க்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாகக் காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே?" என்றார் பெரியவா.
"ஆமாம் பெரியவா"
"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ? அவர நன்னா வெச்சுக்கோ! என்ன செய்வியா? இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு எனக்கு ஆசைதான், ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை. குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது, "சர்க்கார்" ஆபீஸ் இல்லே இல்லியோ? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா, ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். 'பென்ஷன்'னா!" என்று முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.
"சர்வேஸ்வரா! எங்கப்பா கிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லலை பெரியவா. என்னை மன்னிச்சுடுங்கோ!"
"ஒன்னை நான் கொறையே சொல்லலைப்பா! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ண முடியலைன்னுதான் இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி பண்ணினேன்."
அப்பா பண்ணிய சேவையை "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!
பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்? எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.
இராமன்.
|
|
Post your comments to Facebook |
Designed and maintained by AKR Consultants

