- Siddha Sakthi
Courtesy: அம்மம்மா விசாலம்
சித்தர்கள் என்பவர்கள் இன்றும் இருப்பதை நான் உணர்கிறேன். நல்லதையே நினைத்து ஆழ்மனதிலிருந்து செயற்பட்டாற் போதும். அவர்கள் நாம் வேண்டியதை அளித்துவிடுவார்கள். செய்யும் செயலில் போலித்தன்மை யில்லாமல் முழு நம்பிக்கையுடன் ஈடுபட, நினைப்பது நடக்கிறது.
ஒரு தடவை நான் ஸ்ரீ ராம் சூரத்குமார் அவர்களைப்பற்றி ஒரு கட்டுரை படித்து அவரது படம் நம்மிடம் இல்லையே என்றே ஏங்கினேன். தவிர அவரது விபூதி பிரசாதமும் எனக்கு யாராவது கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்று நினைத்தேன். அந்தக் கட்டுரையில் மனம் ஒன்றுப்பட்டு மூன்று தடவை அவர் பெயரைச்சொல்ல அவர் காட்சி தருவார் என்று எழுதப்பட்டிருந்தது. நான் மூன்று தடவைக்குப் பதிலாக பல தடவைகள் சொன்னேன்.
அன்று மாலை கோயிலுக்குப் போக கிளம்பிப் பாதி தூரம் சென்றிருப்பேன். ஒரு மாது என்னைக் கூப்பிட்டார்.
"என் மகன் ஒரு காலண்டர் கொண்டு வந்திருக்கான். உனக்குன்னு எடுத்து வச்சுட்டேன். ஒருவர் முண்டாசுடன் வெள்ளை தாடியுடன் இருக்கார்." என்று சொல்லியபடியே ஒருபெரிய அளவில் இருந்த கலண்டர் கொடுக்க, நான் அதைப் பிரித்துப் பார்த்தேன்.
அதில் இருந்தவர் யோகி ஸ்ரீ ராம் சூரத்குமார் அவர்கள் தான்.
அடுத்தது விபூதி வந்த விதம்
"அண்ணாநகர் டைம்ஸ்"ல் திரு ரா.கி. ரங்கராஜன் அவர்கள் நாலு மூலை என்ற பகுதியில் மிக அழகாக எழுதுவார். அவரைப் பாராட்டி ஒரு கவிதை அனுப்பினேன். அதற்கு நன்றி தெரிவித்தபடி அவர் ஒரு கவரில் கடிதமும் ஸ்ரீ ராம் சூரத்குமார் அவர்களின் விபூதி பிரசாதமும் அனுப்பியிருந்தார். கூடவே சிறு படமுமிருந்தது.
சித்தர் இருப்பது உண்மையே
ஸ்ரீ படே சாஹிபு என்ற சித்தர் ஒருவர் இருந்தார் அவர் பேரும் புகழும் பெற்று எல்லோருடைய அன்புக்குப் பாத்திரமாகவும் விளங்கினார். பொறாமை என்பது யாரை விடும்? ஒரு ஜமீன்தார் பொறாமையால் ஸ்ரீ படே சாஹிபு மேல் கோபம் கொண்டார்.
காரணமில்லாமல் கோபம்! அந்தச் சித்தரை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்று பிளான் செய்து பல ஆட்களைத் தயாரித்தார். எல்லோர் கையிலும் கூர்மையான கத்திகள். சித்தரைத் தேடிக்கொண்டு அவர்கள் போனார்கள், ஆனால் அவர்கள் கண்டது என்ன? ஒரு மரத்தடியில் ஒரு கை கிடந்தது. அருகில் கால், உடல் என்று துண்டுத் துண்டாக கிடந்தது. யார் இப்படிக் கிடப்பது? நம்ம சித்தர் ஸ்ரீ படேசாஹிபு தான்.
அவரை வெட்டப்போன கூலியாட்கள் ஸ்தம்பித்து நின்றார்கள். "ஐயோ! இப்போ என்ன செய்வது? ஜமீன்தாருக்கு என்ன பதில் சொல்வது? நமக்கு முன்பாகவே வேறு யாரோ இப்படிக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டு விட்டார்களே என்ன செய்ய?' என்று குழம்பியபடி தரையில் ஒழுகியிருந்த இரத்தத்தைத் தங்கள் கத்தியில் பூசிக்கொண்டார்கள். பின் ஜமீந்தாரிடம், "நாங்கள் வெற்றியுடன் காரியத்தை முடித்துவிட்டோம்" என்று கத்தியில் இருக்கும் இரத்தத்தைக் காட்டினார்கள்.
ஜமீன்தாரும் அங்குப்போக, "நானா வெட்டப்பட்டிருக்கிறேன்? நானா, துண்டு துண்டாகவா இருக்கிறேன்? யார் சொன்னது?" என்று கேட்டபடியே ஸ்ரீ படே சாஹிபு எழுந்து நின்றார்.
அந்தச் சூழ்நிலை எப்படியிருக்கும்? யோசித்துப் பாருங்கள்.
"தடால்" என்று அவர் காலடியில் விழுந்தார் மனதளவில் ஆடிப்போன ஜமீன்தார்.
Designed and maintained by AKR Consultants


