- முடியிலும் கண்ணன் நாமம்
Vishalam Raman
திரௌபதியின் சபதம் நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனக்குக் கௌரவர்கள் செய்த கொடுமைகளை அவளால்தான் மறக்க முடியுமா? துகிலை உருவும் துச்சாசனன்,.அதைப் பார்த்து ரசித்து எக்காளமிடும் சில கௌரவர்கள், அங்கு விதுரர், பீஷ்மர், துரோணர் போன்ற மஹான்கள் இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலை. அழிவுக்காலம் வந்துவிட்டால் இப்படித்தான் எதாவது நடக்குமோ!
கடைசி வரை போரடிய திரௌபதி தன்னால் இனி முடியாது என்ற நிலை வந்ததும் 'கண்ணா காப்பாற்று" என்று கதற, பின் வருகிறான் கண்ணன். சேலை உருவ உருவ வளர்ந்து திரௌபதியின் மானமும் காப்பற்றப்பட்டது. அப்போது அவள் கண்ணனுக்கு நன்றி தெரிவித்த பின் தன் சபதத்தையும் சபை நடுவே சொல்லுகிறாள்.
பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கப்படிக்க திகட்டாது, அதில் அவர் இதை வர்ணிக்கிறார்,
"தேவி திரௌபதி சொல்வாள் - ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்
பாவி துச்சாசனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக்குழல் முடிப்பேன் யான் - இது
செய்யுமுன்னே முடியேன்" என்றுரைத்தாள்
தன் முடியைப் பிரித்தபடி வைத்திருக்க, பாரதப்போர் முடிந்து தன் சபதத்தை எப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று காத்திருக்கிறாள் அவள். .தலைக் குளிக்காமல ஒரே சிக்குப்பிடித்திருந்தது. பாரதப் போர் முடிந்தது. ஆவேசத்துடன் ஓடி வந்து தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள் திரௌபதி. துச்சாசனனனின் இரத்தம் அவள் கூந்தலில் தடவப்பட்டிருந்தது.
இதைக் குறித்து ஒரு கதை கேள்விப்பட்டேன்.
கண்ணனுக்கும் திரௌபதி ஒரு தடவை துணியைக் கொடுத்துக் காப்பாற்றினாளாம். ஒரு முறை ஆற்றில் நண்பர்களுடன் நீச்சலடித்து விளயாடிக்கொண்டிருக்க வேடிக்கைக்காக, சில குறும்பு நண்பர்கள் கண்ணனின் உடையையும் கௌபீனத்துடன் பறித்து வைத்துக்கொண்டனர். எத்தனை நேரம்தான் நீரில் இருப்பது? அந்த நேரம் அங்கு வந்த திரௌபதி தன் புடவைத் தலைப்பைக் கிழித்து மானம் காத்து உதவினாளாம். இது காதில் விழுந்த செய்தி.
சத்தியபாமாவும் ருக்மிணியும் அந்தத் திரௌபதியின் கண்ணன் பக்தியைக்காண அவளிடம் சென்றனர். திரௌபதி தலையில் இருக்கும் சிக்கையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ இருவரும் அவளை நெருங்கி, தாங்களும் அவள் முடியைச் சரி செய்தனர். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. ஒவ்வொரு முடியிலிருந்தும் ஒரு ஒலி எழுந்தது அந்த ஒலி என்ன தெரியுமா? அதுதான், "கிருஷணா கிருஷ்ணா!"
பக்தி என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்!
Designed and maintained by AKR Consultants

