Bookmark and Share 


Healthcare Tips
Parents Home
Couples Suit
Spiritual Path
Student's Corner
Youth Resort
Management
Lighter Moments
Entertainment
Serious Side
World Tour
Internet Links
Snippets

   
Tamil-English bilingual webmagazine dedicated to education of the masses through E-books, articles, worldwide informations, Slideshows, Presentations on various subjects, photographs and images, moral and objective oriented stories and Lectures including audio and video

பொடியாகி விழுந்த காளஹஸ்தி கோபுரம்

Courtesy: Junior vikatan

''உட்பாதம் கொடுக்கும் எச்சரிக்கை இது?!''

பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி சிவன் கோயில். இங்கே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டுமானமாகிய ராஜ கோபுரம் மிக கம்பீரமானது. திடீரென்று ஒருசில நாட் களுக்குமுன் அந்த ராஜகோபுரம் உச்சியில் பெரும் விரிசல் தென்பட... அதை பக்தர்கள் கவனித்து பதறத் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே விரிசல் விறுவிறுவென அகண்டு கோபுரமே கிட்டத்தட்ட இரண்டாகக் காட்சி தந்து... கடைசியில் கடந்த 26-ம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு மொத்தமாக இடிந்து மண்ணாகிவிட்டது.

சக்திமிக்க இந்தக் கோயில் கோபுரத்தின் வீழ்ச்சி, ஆந்திராவில் அடுத்தடுத்துக் கெடுதிகளை ஏற்படுத்தலாம் என்ற பீதி ஆன்மிகவாதிகள் மத்தியில் பரவத் தொடங்கி இருக்கிறது! கோபுரத்தின் அருகில் இருந்த சில வீடுகள் சேத மானாலும், தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் எந்த உயிர்ச் சேதமும்இல்லை. ''காளஹஸ்தி கோபுரம் ரொம்ப விசேஷமானது. கி.பி. 1510-ம் ஆண்டுவாக்கில்,

கிருஷ்ணதேவராயர் போரில் அடைந்த பல வெற்றிகளுக்குக் காரணம் காளஹஸ்தி சிவன்தான் என்கிற நம்பிக்கையில் இது கட்டப்பட்டது. இந்தக் கோபுரத்தில் 1960-ம் ஆண்டு வாக்கில் இடி விழுந் தது. அப்போதே சிறு விரிசல் ஏற்பட்டது. உடனே, அதைச் சரிசெய்துவிட்டார்கள். அதன் பின், பல வருடங்களாக கோபுரத்தில் இருந்த சின்னச் சின்ன விரிசல்களைச் சரிசெய்ய பராமரிப்பு பணிகள் நடந்தன. அப்படி இருந்தும், தற்போது கோபுர உச்சியில் ஆரம்பித்து அடி வரை அப்படியே இரண்டாகப் பிளந்துவிட்டது!'' என்றார் கோயில் குருக்கள் அதிர்ச்சியோடு. கோயிலின் செயற்பொறியாளர் வாசுதேவன் நம்மிடம், ''ஆரம்பத்தில் சிறிதாக இருந்த விரிசல் ஒவ்வொரு நாளும் பெரிதாகி, கோபுரம் முழுக்கப் பரவிவிட்டது. சென்னையில் இருந்து வந்த பேராசியர் நரசிம்மராவ் கோபுரத்தில் இருந்து விழுந்த கற்களின் மாதிரிகளைச் சோதித்துப்பார்த்து, 'கோபுரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது' என்றார். உடனே, கோபுரத்தைச் சுற்றி 500 மீட்டர் அளவுக்கு அக்கம்பக்கம் உள்ளவர்களைக் காலி செய்துவிட்டோம். அதோடு, என்ன செய்யலாம் என அறநிலையத் துறை அதிகாரி களுடன் கலந்தாலோசித்தோம். அதற்குள் கோபுரம் இடிந்துவிட்டது.'' என்றார்.

கோயிலின் முன் கூடிய பக்தர்கள், ''கோயிலின் ஆகம விதிகளை மீறி அதிகார வர்க்கத்தினர் நடந்து கொள்வதால்தான் இப்படிப்பட்ட பேரவலம் ஏற்பட்டு விட்டது...'' என்று அறங்காவல் குழுவினருக்கு எதிராகக் குரல் எழுப்பியதும் நடந்தது. பக்தர்கள் சிலர் நம்மிடம், ''ராகு-கேது தோஷ நிவர்த்திக்கான மிகச் சிறந்த பரிகார ஸ்தலம் இது. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். வருகிறவர்களில் பெரும்பாலோர் பரிகாரப் பூஜைகளில் கலந்துகொள்பவர்கள். அவர்கள் மூலம் லட்சக்கணக்கில் கோயிலுக்கு வருமானம் கொட்டும். ஆனால், இப்படி வருகிற பக்தர்கள் ஒழுங்காக சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை... தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஜெயலலிதா ஆகியோர் சமீபத்தில் கோயிலுக்கு வந்தபோது, அவர்களுக்காக ஆகம விதிகளை மீறிப் பல்வேறு சலுகைகள் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கில் தட்சணை தரும் பணக்காரப் பக்தர்களுக்கு இதைச் செய்யும் அதிகாரிகள், சாமான்யப் பக்தர்களை அலைக்கழிக்கிற கொடுமையைக் கண்டு சிவனே நெற்றிக்கண்ணைத் திறந்துவிட்டாரோ என்னவோ...'' என்று கொந்தளித்தனர்.

பக்தர்களின் காரணங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பி.ஜே.பி. மற்றும் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவரான சேஷாத்திரிநாத சாஸ்திரிகளிடம் கோபுர வீழ்ச்சி குறித்து கேட்டோம்.

''மக்களை ஆள்வோர் தவறான வழியை மேற்கொண்டால் உட்பாதம் நேரும் என வேத நூல்களில் உள்ளது. காரணம் இல்லாமல் திடீர் திடீரென நிகழும் பேரழிவுகள் மற்றும் விநோதமான சம்பவங்களைத்தான் உட்பாதம் என்பார்கள். கோயில்களில் உள்ள சிலைகளில் வியர்வை வழிவது, கோபுரங்களில் விரிசல்கள் கண்டு உடைவது, சிலைகள் அசைவது ஆகிய விஷயங்களின் மூலம் 'நாட்டில் ஆள்வோருக்கும் மக்களுக்கும் கெட்ட விஷயங்கள் நடக்க இருக்கிறது, பெரிய அளவிலான பேரழிவுகள் நடக்கப்போகிறது' என்பது முன்கூட்டி உணர்த்தப்படும். தவறு செய்ப வர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக, தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனால், சமுதாயமே சீர்கெட்டுவிடும். அப்படிச் சீர்கெட்ட சமுதாயத்தில் இருந்துதான் நம்மை ஆள்வோரையும் தேர்ந்தெடுக்கிறோம். ஆள்பவர் ஒழுக்கக்கேடாக இருந்தால், நிச்சயம் உட்பாதம் நேரும்.

கோயில் கோபுரம் முழுதும் இடிந்து விழுந்ததாக இதுவரை சரித்திரம் கிடையாது. ஏனெனில், கோபுரங்களின் கட்டட சாஸ்திர அமைப்பு அத்தனை பாதுகாப்பானது. மொத்த எடையும் அடிப்பாகம் தாங்கும் வகையில் அமைக்கப்படும். காளஹஸ்தி கோபுரம் மேலிருந்து கீழ் வரை ஒட்டுமொத்தமாகச் சிதைந்து விழுந்ததால், அந்த அளவுக்கு அதர்மம் நடந்திருக்கிறது என்றுதானே பொருள்?'' என்றார்!

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் ஆந்திராவை உலுக்கியது. சில நாட்களுக்கு முன்பு 'லைலா' புயல் அந்த மாநிலத்தை புரட்டிப் போட்டது. இப்போது, கோபுரம் இடிந்த அன்று ஆந்திராவில் அலகாபாத் அருகே கல்யாண கோஷ்டி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி, 40 பேர் வரை பலியாகிவிட்டார்கள்!

'இதெல்லாம் தற்செயலா? அல்லது தெய்வச் செயலா?' என்ற பட்டிமன்றம் பலமாகவே நடக்கிறது, சென்டிமென்ட் வேருன்றிய ஆந்தி ராவில்!

- டி. தணிகைவேல்
படங்கள்: எம்.ஆர்.பாபு

PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:  

*E-mail:  

*Comments:




Designed and maintained by AKR Consultants