- லட்சுமி வண்டு
Courtesy: Vishalam Raman
நான் போன வருடம் மன்னார்குடிக்குச் சென்றிருந்தேன். அங்குக் கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும் ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீர் வைப்பது வழக்கம் அந்தக் குளியல் அறையில் இரண்டு கரப்பான் பூச்சிகள் தன் மீசையை ஆட்டியபடி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. நான் பாம்பின் முன்னால் கூட நின்றுவிடுவேன் என நினைக்கிறேன், ஆனால் இந்தக் கரப்பாம்பூச்சிகள் கண்டால் சிம்ம சொப்பனந்தான். அவ்வளவு பயம் ஒரு தடவை அப்பளம் பொரித்து அவைகளை ஒரு தட்டில் வைத்து எடுத்து வருகையில் ஒரு கரப்பு சன்னல் வழியே பறந்து வர, சிவசிவா! அது நான் நடந்த வழியில்தான் வரவேண்டுமா என்ன வீலென்ற சத்தம் என் கையிலிருந்த தட்டு கீழே விழ அப்பளங்கள் சுக்குநூறாக உடைய என் கணவரின் வருகை என்னை மேலும் அழாத குறைதான்.
"அது என்ன செய்துவிடும், கடித்துத் தின்றுவிடுமா என்ன? என்று மேலும் சில அடைமொழிகளை அடுக்கி வீச, என் கோபமெல்லாம் அந்தக் கரப்பான் பூச்சிமேல் சென்றது. எனக்கு மட்டும் மந்திர சக்தி இருந்தால் அந்த்க் கரப்பு என் ஒரு பார்வையிலேயே பஸ்மம் ஆகி இருக்கும்.
இந்த நினைவில் அந்தக் கரப்பைப் பார்த்தபடியே குளிக்க முயற்சி செய்தேன், ஆனால் என் பயத்தைத் தெரிதுகொண்டு என் பக்கமே அது வேகமாக நகர்ந்து வந்தது. இனி குளிக்க முடியாது என்று ஒரு பழைய புடவைச் சுற்றியபடி வெளிவந்தேன்.
என் அத்தை என்னிடம், "ஏண்டி இப்பத்தான் உள்ளே நுழைந்தாய், அதுக்குள்ளே குளிச்சாச்சா?"
"இல்ல அத்தே, உள்ளே ரெண்டு கரப்பான் பூச்சி இருக்கே, எப்படிக் குளிக்கறது?"
"இதுக்கா ஓடி வந்துட்டே, சிவகாமியைக் கூப்பிட்டு விரட்டச்சொல்லு."
வேலைக்காரி சிவகாமியைக் கூப்பிட்டேன், "சிவகாமி, இங்க வாயேன், இந்தக் கரப்பை அடி அல்லது விரட்டு."
சிவகாமி வந்தாள், "அக்கா, இது லட்சுமி வண்டுன்னா, இத எப்படி அடிக்கறது? அது ஒன்னும் செய்யாது. அதக் கொன்னா வூட்லேந்து லட்சுமி போய்விடுவா அக்கா? நீ மாட்டும் குளிச்சுக்கோ."
நான் மறுக்க, அவள் தன் கையால் பிடித்து அதை ஆசையாக எடுத்து, கொல்லைப் பக்கம் வீசி எறிந்தாள். அப்பாடி போச்சு! அதன் கலரும் அதன் மீசையும் பார்த்தாலே மனதில் ஒரு அறுவருப்பு.
ஆனால் இன்னும் பலர் அது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு மிகப்பிடித்தமான பூச்சி என்று நம்புகிறார்கள். கரப்பான் பூச்சியைக் கொன்றால் அல்லது அடித்தாலோ செல்வம் போய்விடும் என்று நம்புகிறார்கள். கிராமபுரங்களில் அதிகமாக இதை நம்புகிறார்கள், யாராவது அடிக்க வந்தாலும் தடுத்து விடுகிறார்கள்.
மனித குலத்திற்குத் தீமையை அளிக்கும் இந்தக் கரப்பான் பூச்சியை இவர்கள் காப்பாற்றுவதேன்? அசுத்தமான அறைகள், இருள் சூழ்ந்த இடங்கள், சாக்கடைகள் போன்ற பகுதிகள், செப்டிக் டாங்கின் மூடிகள் போன்ற இடங்களில் அப்படியே அடை அடையாக தரிசனம் தருவது இவைகள்தான். மூலைகள் இதற்கு மிகவும் பிடித்த இடம். இரவு நேரங்களில் தான் இவைகளுக்கு சாப்பாட்டு நேரம். உணவு பண்டங்களை மெல்ல பதம் பார்க்கும். சில சமயத்தில் அசந்து தூங்கும் மனிதனின் விரல்களைக் கண்டு பிடித்துக் கடித்து வைக்கும். அந்த இடம் மறு நாள் சுரீரென்று எரியும் போதுதான் கரப்பு கடித்துப் போனது தெரியும், அவ்வளவு சுகமான ஆழ்ந்த தூக்கம்.
சாப்பாடு தான் சாப்பிடுகிறதே, திரும்பத் தன் இடம் போகிறதா என்றால் அதுவும் இல்லை. அந்த இடத்திலேயே புழுக்கை என்ற கழிவுப் பொருளைக் கழித்துவிட்டுச் செல்கிறது அதன் துற்நாற்றம் ஒரு ஸ்பெஷல் தான்.
டாக்டர் இதைப்பற்றிச் சொல்வது என்னவென்றால் இதன் மூலம் உண்டாகும் நோய்க் கிருமிகள் தொற்றிய பாத்திரங்கள் அல்லது நீரையோ கையாளும் போது பல வியாதிகள் உண்டாகுகின்றன. காலரா, க்ஷயரோகம், தொழுநோய், டைபாய்டு போன்றவைகள் இந்தப் பூச்சிகளால் பரவுகின்றன, தவிர வயிற்று வலியும் வயிற்றுக் கடுப்பும் வருகின்றனவாம்.
தடுக்கும் முறைகள்
வீடு அதிக சாமானகள் சேராமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் பழைய சாமான்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பழைய பேபர்களை சேர்க்காமல் கபாடிவாலாவுக்குப் போடவேண்டும்.
பாத்ரூம் இடுக்கில் அப்பப்போது மருந்து அடிக்க வேண்டும்.
எதாவது ஓட்டை இருந்தாலும் அதை அடைக்க வேண்டும்.
கிச்சன் மேடையை வேலை முடிந்த பின் சுத்தமாகத் துடைத்து வைக்க வேண்டும்.
பாத்திரங்களை ஈரத்துடன் அப்படியே அலமாரியில் வைக்கக் கூடாது. ஒரு காய்ந்த துணியால் துடைத்து வைக்க வேண்டும்.
வருடத்தில் இரண்டு முறையாவது முனிசிபாலிடி மூலம் பூச்சி மருந்து அடிக்கச் சொல்ல வேண்டும்.
புடவை அலமாரியை நன்றாக இடுக்கில்லாமல் சார்த்தி வைக்க வேண்டும்.
கரப்பான் பூச்சிக் கொல்லிகளையும் உபயோகிக்கலாம்.
Designed and maintained by AKR Consultants

